ஸ்டுடியோ கீரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் சூர்யா பேசிய போது,
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேற வேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார், கமல் சார், விஷால் உள்ளிட்டவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்க வேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.
எப்படி ஒவ்வொரு டைரக்டரும், ஒவ்வொரு தயாரிப்பாளரும் எனக்கு முக்கியமோ, அதேபோல் ஒவ்வொரு படத்திலும் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் முக்கியம். இதுவரை எனது நடிப்பில் வெளியாகி உள்ள 35 படங்களில் இதுவரை நிறைய நல்ல படங்களை கொடுக்க முடிந்துள்ளது என்று தைரியமாக சொல்ல முடியும். அதற்கு பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் காரணமாக இருந்துள்ளனர். ரசிகர்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். ஆனால் இன்னும் ஆதரவாக இருந்தது ஞானவேல் தம்பி.
என்னுடைய வாழ்க்கையில் நல்ல முடிவுகளை தேர்ந்தெடுத்து என்ன பண்ண வேண்டும் என்று அறிவுரை கூறுவார். எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள், எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்கையில் முக்கியமாக அமைத்துள்ளது.
அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் இந்த கூட்டணி இணைந்தது. விக்னேஷ் சிவனை சந்திக்கப் போவதாக ஹரி சாரிடம் கூறினேன். அதற்கு அவர் நிச்சயமாக அவருடன் படம் பண்ண வேண்டும் என்று கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ண வேண்டும் என்று கூறினார்கள். 1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கபட்டது என்றாலும், அதை மையாக வைத்து தான் ஸ்பெஷல் 26 என்ற படம் உருவானது. முற்றிலும் வேறு ஒரு பாதையில் கதை செல்கின்றது. முதல் சந்திப்பில் இருந்து `தானா சேர்ந்த கூட்டம்’ என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது.
உடன் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக பணிபுரிந்துள்ளார்கள். படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் மிக சிறப்பாக அமைத்துள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் என்ற Disclaimer card எங்கள் படத்தில் வராது, அப்படி ஒரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர் என்றார் சூர்யா.



Leave A Comment
You must be logged in to post a comment.