இறுதி சுற்று படத்துக்கு பிறகு மாதவன் மீதான மரியாதையும், நம்பிக்கையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் நம்பிக்கையில் இருக்கும் சிறந்த நடிகரான மாதவன், இயக்குனர் சற்குணம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் பல்வேறு அழகான இடங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

மிக பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தை ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘றெக்க’ படங்களை தயாரித்த காமன்மேன் கணேஷ் தயாரிக்க இருக்கிறார். ‘மஞ்சப்பை’, நயன்தாராவின் ‘டோரா’ படங்களை தன் பேனர் மூலம் தயாரித்த இயக்குனர் சற்குணம், இந்த படத்தை இயக்குவதோடு இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

இது குறித்து இயக்குனர் சற்குணம் கூறும்போது, “இந்த படம் காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்தியது, தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் பார்ட் 2 மற்றும் ட்ராகுலா அண்டோல்டு படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் சண்டைக்கலைஞர் க்ரே பரிட்ஜ் பணியாற்றுகிறார். இது வேதாளம் சொல்லும் கதை படத்தின் இயக்குனர் ரதிந்திரன் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக உருவாகும் இந்த படத்தை குழந்தைகளுக்கான படமாகவும் உருவாக்குகிறோம். இது ஒரு குடும்பத்தோடு பார்க்ககூடிய பொழுதுபோக்கு படமாகும். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது” என்றார்.