தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 28 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு நட்சத்திர கலைவிழா நடத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நிதி திரட்ட நட்சத்திர கலைவிழா வருகிற ஜனவரி 6ந் தேதி மலேசியாவில் நடக்கிறது. இதனை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தொடங்கி வைக்கிறார். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மலேசியாவில் நடந்தது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் , நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்தி , கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் , மனோபாலா , குட்டி பத்மினி , ரோகிணி , பசுபதி , ரமணா , நந்தா , உதயா , ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தனர். இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வருகிற ஜனவரி 6 ந் தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி , நடனம் , நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு சூர்யா , விஷால் , கார்த்தி , ஜெயம்ரவி , ஜீவா ஆகியோர் தலைமை தாங்குவார்கள். ரஜினி , கமல் உட்பட 100க்கும் மேற்ப்பட்ட நடிகர் , நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மலேசிய நடிகர்கள் நமது தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் மோதவுள்ளனர். எதிர்காலத்தில் மலேசிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ் படங்களில் பணியாற்ற வாய்ப்பு எற்படுத்தி தரப்படும். இந்நிகழ்ச்சி மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.இவ்விழா மலேசிய புக்கிஜாலி அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் 80,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.