தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். நடிகரையும் தாண்டி, தயாரிப்பாளர், இயக்குநர் என பிரபலமான தனுஷ், பாடகரும் கூட. அனிருத் கூட்டணியில் இவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் பிரபலமானது. தமிழில் ஒரு சில பாடல்கள் பாடியிருக்கிறார்.

தற்போது, மாரி 2 படத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் இளையராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார். சமீபத்தில் இதற்கான பாடல் பதிவு நடந்ததை தனுஷ் தன் டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் தனுஷூக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இளையராஜா. மராத்தியில், அமோல் படவ் இயக்கும் ‘பிலிக்கர் என்ற படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இதில் தனுஷை ஒரு பாடல் பாட வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளையராஜா.

சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் எப்போது இளையராஜா இசையில் பாடுவீர்கள் என்று கேட்டார், அதற்கான பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறிய தனுஷூக்கு இப்போது கிடைத்திருக்கிறது.