கலிங்கா திரைப்படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் “பற”. இத்திரைப்படத்தை பச்சை என்கிற காத்து, மெர்லின் படங்களை இயக்கிய கீரா இயக்குகிறார்.

சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும், அநீதிகளுக்கு எதிராக போராடும் வழக்கறிஞராக, தன் குழந்தையை பறிகொடுத்த தந்தையாகவும், காதலர்களின் காவலனாகவும் சமுத்திரகனி நடித்திருக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு படமாகிக் கொண்டிருக்கிறது.

படம் பற்றி இயக்குனர் கீரா கூறியதாவது…. இது நம் அன்றாட வாழ்வில் தினசரி செய்திகளாக படித்தும், கேட்டும் கடந்து போகிற எளிய மக்களின் வலிமையான காதல் பற்றிய படம். துயரங்களை மட்டுமே சுமக்கும் மனிதர்கள், வெவ்வேறு சூழலில் வெவ்வேறு வாழ்க்கையினை சுமந்துக் கொண்டிருக்கும் மனிதர்கள், வெவ்வேறு இடத்திலிருந்து ஒரே இடத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயமும் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுமே கதையின் பரதான கன்னியாக இருக்கின்றது.

பிளாட் பாரத்தில் வாழ வழியற்ற ஒருவனும், ஒரு கிராமத்திலிருந்து கிளம்பும் காதலர்களும், வயதான காலத்தில் தனிமையிலிருந்து விடுபட கிளம்பும் முதியோர்களும், ஒரு திருடனும், ஒரு வழக்கறிஞர், ஒரு கட்சி தலைவரும், போலீஸூம், கிளப் டான்ஸரும் என பல்வேறு மாந்தர்களின் வாழ்க்கை ஓர் இரவில் தொடங்கி ஓர் பகலில் முடியும் 12மணி நேர கதைதான் “பற”.

படத்தின் படப்பிடிப்பு நாகர்கோயில், ராயபுரம், எண்ணூர் மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் சமுத்திரகனி, சாந்தினி, முனிஸ்காந்த், நிதிஷ் வீரா, முத்துராமன், சாஜீ மோன், வெண்பா, தீக்கதிர் குமரேசன், கம்பம் மீனா, சூப்பர் குட் சுப்ரமணி, பேராசிரியர் செல்வக்குமார், அஸ்மிதா, வின்னர் ரமச்சந்திரன், பிரின்ஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.