பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் முதல் படம் பொன் மாணிக்கவேல். இதில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வில்லனாக பாகுபலியில் காளகேயராக நடித்த பிரபாகர் நடிக்கிறார், சுரேஷ்மேனன், இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

பேராசிரியர் ஞானசம்பந்தம், முகேஷ் திவாரி, நாகேஷ் பேரன் பிஜேஷ் உள்பட பலரும் நடிக்கிறார்கள். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், இமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் அண்மையில் நடந்த ஒரு முக்கிய சம்பவம் கதை கருவாக இடம்பெறுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஏ.சி.முகில் செல்லப்பன் கூறியதாவது:
இது வழக்கமான போலீஸ் கதை அல்ல. யதார்த்தமான போலீஸ் கதை. அண்மையில் நடந்த ஒரு முக்கிய சம்பவத்தின் பின்னணியில் கதை நடக்கும். நேர்மையான போலீஸ் அதிகாரியான பிரபு தேவாவின் வாழ்க்கையை புரட்டிப்போடுகிற ஒரு விஷயம் நடக்கிறது. அதன்பிறகு அவர் என்ன ஆகிறார் என்பதுதான் கதை.
இந்த கேரக்டருக்காக பிரபுதேவா ஜிம்முக்கு சென்று உடல் எடையை கூட்டியுள்ளார். பிரபுதேவா இதுவரை இல்லாத அளவிற்கு இதில் ஆக்ஷ்ன் காட்சிகளில் நடிக்கிறார். அவரது ரசிகர்களை திருப்திப்படுத்த நடன காட்சியும் இருக்கிறது. எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு போலீஸ் படம் அடையாளமாக இருக்கும். இந்தப் படம் பிரபுதேவாவுக்கு அப்படி ஒரு அடையாளத்தை கொடுக்கும். என்றார்.



Leave A Comment
You must be logged in to post a comment.