ரஜினியின் அண்ணாத்த படத்தின் ஆரம்ப பாடல்தான்.. எஸ்பிபிக்கு கடைசி பாடல்… டி.இமான்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இசை ரசிகர்களுக்கு பெரும் வலியைக்கொடுத்துள்ளது. ஏராளமான திரைத்துறையினர் இரங்கலை, அனுபவங்களை பதிவிட்டு வருகிறார்கள். எத்தனையோ கதாநாயகர்களுக்கு எஸ்.பி.பி. பாடியிருந்தாலும், ரஜினிகாந்த் தனி சிறப்பு தான். ரஜினி நடித்த பல படங்களில், அறிமுகப் பாடலை எஸ்பிபிதான் பாடியிருப்பார்.

இந்நிலையில், எஸ்.பி.பி. மறைவு குறித்து இரங்கல் தெரிவித்திருந்த இசைமைப்பாளர் டி.இமான், அவருடனான அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

அதில், “எஸ்பிபி சாருடைய மறைவு எத்தனையோ இசை ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றம், பெரிய வலியைக் கொடுத்துள்ளது. நம்முடைய எத்தனையோ இரவுகளுக்கு ஒரு துணையாக இருந்திருக்கிறார். என்னுடைய இசைப் பயணத்தில் சின்னதிரையிலும் சரி, வெள்ளித்திரையிலும் சரி அவருடன் பணிபுரிய வாய்ப்புகள் கிடைத்தன. ‘ஜில்லா’ படத்தில் ‘பாட்டு ஒண்ணு’ பாடலை எஸ்பிபி சாரும், ஷங்கர் மகாதேவன் சாரும் இணைந்து பாடியிருப்பார்கள்.

திரையில் விஜய் சாரும், மோகன்லால் சாரும் ஆடியிருப்பார்கள். அதற்குப் பிறகு ரஜினி சார் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் அறிமுகப் பாடலைப் பாடியிருக்கிறார். அவருடைய கடைசிப் பாடல் ரஜினி சாருக்காக அதுவும் என்னுடைய இசையில் நடந்திருக்கிறது என நினைக்கும்போது ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.

அதைச் சொல்வதற்கே வார்த்தைகள் இல்லை. எஸ்பிபி சார் அவ்வளவு அன்பானவர், பண்பானவர். அற்புதமான மனிதர். இனிமையானவர். அவருக்கு மாற்றே கிடையாது. மிஸ் பண்ணுவேன் எஸ்பிபி சார். லவ் யூ” என்று தெரிவித்துள்ளார்.