விஜய் ரசிகர்களை இழுக்கவே ரஜினிகாந்த் அப்படி கூறினார்…! ரஜினி மக்கள் மன்ற செயலாளர் பரபரப்பு பேச்சு

சமீபத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பேசிய ரஜினிகாந்த், மூன்று கொள்கைகளை முன்னிறுத்தினார். அதில், கட்சி தொடங்கினால் இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்பது முக்கியமான ஒன்று.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடந்தது. முக்கிய உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மூத்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ரஜினி கூறிய எழுச்சியை மக்களிடம் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.


சுந்தரமூர்த்தி பேசுகையில், “திமுக இதுவரை ரஜினி மக்கள் மன்றத்தினரை விமர்சிக்கவில்லை அதற்கு காரணம், கருணாநிதிக்கு ஆதரவாக இருந்த ரஜினிகாந்த், தனக்கும் ஆதரவாக இருப்பார் என ஸ்டாலின் அற்ப ஆசையில் இருக்கிறார். தமிழகத்தில் இரு கட்சிகளுக்கிடையே தான் தேர்தல் போட்டி நிலவும். அது ரஜினிகாந்த் – ஸ்டாலின் என்று தான் இருக்கும்.

விஜய் ரசிகர் மன்றத்தில் உள்ள இளைஞர்களை கவரும் விதமாகத்தான் எதிர்வரும் அரசியல் களத்தில் கட்சி தொடங்கினால், அதில் இளைஞர்களுக்கு 60 சதவிகிதம் வாய்ப்பு வழங்கப்படும் என்று ரஜினிகாந்த் பேசியதாகவும், இது விஜய் ரசிகர்களை இழுக்கும் ஒரு முயற்சியாக இருக்கும்” என்று சுந்தரமூர்த்தி கூறியுள்ளார்.