இராமேஸ்வரம்

இராமேசுவரம் அல்லது இராமேஸ்வரம் (Rameshwaram, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.

இது பாம்பன் தீவில் அமைந்துள்ள நகர் ஆகும். தீபகற்ப பகுதியுடன் பாம்பன் பாலம் இத்தீவை இணைக்கின்றது. இங்கிருந்து இலங்கையின் மன்னார் தீவு 50 கிமீ தொலைவில் உள்ளது. சென்னை மற்றும் மதுரையிலிருந்து வரும் தொடர்வண்டிகளுக்கான முனையமாக இராமேசுவரம் அமைந்துள்ளது. வாரணாசிக்கு இணையான புனித வழிபாட்டுத் தலமாக இராமேசுவரமும் இந்துக்களால் கருதப்படுகின்றது.

இந்து தொன்மவியலில் இராமர் இலங்கையிலிருந்து தனது மனைவி சீதையை மீட்க இங்கிருந்துதான் பாலம் அமைத்ததாக நம்பப்படுகின்றது. நகரின் மையத்திலுள்ள இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் சிவனுக்குரிய கோவிலாகும். இராமர் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகின்றது. இக்கோவில் இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம் , வைணவம் இரு சமயத்தினருக்கும் முதன்மையாக உள்ளது.

இலங்கையை அடைய மிக அண்மையான துறையாக இராமேசுவரம் உள்ளது. புவியியல் சான்றுகளின்படி ஆதாமின் பாலம் இருநாடுகளுக்கும் இடையே நிலவழி இணைப்பாக முற்காலத்தில் இருந்துள்ளது. எல்லை கடந்ததாக இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், கச்சத்தீவு மற்றும் இலங்கை ஏதிலிகள் தொடர்பான செய்திகளால் இராமேசுவரம் பரவலாக ஊடகங்களில் அறியப்படுகின்றது.இராமேசுவர நகராட்சி 1994இல் நிறுவப்பட்டது. நகரப்பகுதி 53 கிமீ2 பரப்பளவில் 44,856 மக்கள் தொகையுடன் (2011 கணக்கெடுப்பு) அமைந்துள்ளது. சுற்றுலாவும் மீன்வளமும் முதன்மை பணிவாய்ப்புகளாக உள்ளன.